கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாட்டில், இன்று நண்பகல் 12 மணி வரையில் 25 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.
அதில், 12 சம்பவங்கள், அதிவேக பரவலாக இருக்ககூடும் என்று அஞ்சப்படும், சிவகங்கை தொற்றுடன் தொடர்புடையவையாகும் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.
இன்று பதிவாகிய எண்ணிக்கையில், 9 சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும் 16 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
அதில், 23 சம்பவங்கள் மலேசியர்களை உட்படுத்தியது என்றும் எஞ்சிய இருவர் அந்நிய நாட்டவர் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, இன்று மேலும் 15 பேர் குணமடைந்து வீடுத் திரும்பி இருக்கின்றனர்.
இந்நோயினால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இருவரில் ஒருவருக்கு சுவாச கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று கொவிட்-19 நோயினால் எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகததைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 125 ஆக நீடிக்கிறது.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை