பொது

கொவிட்-19: பத்து சம்பவங்களில் எண்மர் மலேசியர்

06/08/2020 07:36 PM

புத்ராஜெயா, 06 ஆகஸ்ட் (பெர்னாமா) --உள்நாட்டில் பரவும் கொவிட்-19 சம்பவங்கள், நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று புதிதாக பதிவாகிய 15 கொவிட்-19 சம்பவங்களில், 10 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகும்.

எஞ்சிய ஐந்து சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியதாகும் என்று, சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

உள்நாட்டில் பரவிய 10 சம்பவங்களில் எண்மர் மலேசியர்களும் இருவர் அந்நிய நாட்டினரும் ஆகும் என்று  நோர் ஹிஷாம் தெரிவித்திருக்கிறார்.

இதில், ஆறு சம்பவங்கள் , சிவகங்கை தொற்றை உட்படுத்தியதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவில், இன்று, வியாழக்கிழமை நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான சிறப்புச் செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் நோர் ஹிஷாம் இத்தகவல்களைத் தெரிவித்தார். 

இதனிடையே, இன்று மேலும் 11 பேர் குணமடைந்து வீடுத் திரும்பி இருக்கின்றனர். 

இந்நோயினால், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இருவரில் ஒருவருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. 

இன்று கொவிட்-19 நோயினால் எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகததைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 125 ஆக நீடிக்கிறது.

 - பெர்னாமா