பொது

வேலையின்மை விகிதம் அதிகரிக்கலாம் - பிரதமர்

13/07/2020 04:51 PM

கோலாலம்பூர், 13 ஜூலை (பெர்னாமா) -- கொவிட்-19 நோயினால், வேலையின்மை விகிதம் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுவது குறித்து செம்பூர்ணா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ முஹமட் ஷாஃபி அப்டாலின் கூடுதல் கேள்விக்கு பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் பதிலளித்தார். 

உலகளவில் இந்த வேலையில்லா பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும், மலேசியாவில் தற்போது இதன் விகிதம், 5 விழுக்காடு அல்லது ஏழு லட்சத்து 720 ஆயிரம் என்று கணிக்கப்பட்டிருப்பதாகவும் முகிடின் யாசின் கூறினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள், இது எட்டு லட்சத்து 20 ஆயிரமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் இல்லை என்றாலும், அரசாங்கம் கொவிட்-19-தினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஊதிய மானியம், ஊதிய செலவினங்கள் மற்றும் வங்கி கடன்களை திரும்பச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். 

"அதனால், அனைத்து வகையான ஊக்குவிப்பு உதவிகளான, உதாரணத்திற்கு, ஊதிய மானியம், ஊதிய செலவுகள் அல்லது வங்கி கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பு போன்றவற்றை நிறுவனங்களுக்கு நாங்கள் வழங்கி இருக்கிறோம். நாட்டில் உள்ள வங்கிகள் இதற்கு 10 ஆயிரம் கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளன. இது, நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு, வேலை வாய்ப்பை வழங்கவும் வேலையில்லா பிரச்சனை அதிகரிக்காமல் இருப்பதை உறுதிசெய்யவும் வாய்ப்பளிக்கிறது," என்று முகிடின் யாசின் தெரிவித்தார்.

-- பெர்னாமா