புத்ராஜெயா, 22 மே (பெர்னாமா) -- நாட்டில் கொவிட்-19 பெருந்தொற்றைத் துடைத்தொழிப்பதில் பெரும்பங்காற்றி வரும் அனைத்து முன்னிலைப் பணியாளர்களுக்கும் பிரதமர் டான் ஸ்ரீ முகிடின் யாசின் தமது பாராட்டுதலைத் தெரிவித்திருக்கின்றார்.
தேசிய அளவில் மட்டுமல்லாது, அனைத்துலக ரீதியிலும், முன்னிலை பணியாளர்களுக்கு அங்கீகாரங்கள் வழங்கப்படுவதை, முகிடின் சுட்டிகாட்டியிருக்கிறார்.
உலகளாவிய நிலையில் ஒப்பிட்டு பார்க்கும்போது, மலேசியா ஒரு சிறந்த சுகாதார நிர்வகிப்பை கொண்டிருப்பதாக டான் ஸ்ரீ முகிடின் கூறினார்.
இதனிடையே, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பிகேபி அமல்படுத்தப்பட்டது முதல், கொவிட்-19 நோய் பரவலை கட்டுப்படுத்த அயராது உழைத்து வரும் முன்னிலை பணியாளர்களின் மாதாந்திர சிறப்பு அலவன்ஸ் குறித்த விவகாரத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார்.
இது குறித்த உத்தரவை நேற்று, வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் தாம் வழங்கியதாக, அவர் தெரிவித்தார்.
மேலும், முன்னிலை பணியாளர்களுக்கு ஓய்வளிக்க, கொவிட்-19 நோயை தடுக்கும் பொறுப்பை மலேசியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முகிடின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை