பொது

இன்று வியாழக்கிழமை கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட 121 பேர் முழுமையாக குணமடைந்திருக்கின்றனர்

09/04/2020 07:40 PM

புத்ராஜெயா, 09 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டில், இன்று வியாழக்கிழமை மட்டும், கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட 121 பேர், முழுமையாக குணமடைந்து வீடுத் திரும்பி இருக்கின்றனர். 

இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, ஆயிரத்து 608-ஆக அதிகரித்திருப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். 

இன்று மாலை 5 மணி வரையில், நாட்டில், இந்நோயினால், இருவர் பலியாகியிருப்பதைத் தொடர்ந்து, மொத்த மரண எண்ணிக்கை 67-ஆக பதிவாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

அதே வேளையில், இன்று நண்பகல் 12 மணி வரையில், மேலும் 109 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. இதனுடன் சேர்த்து, நாட்டில் இதுவரையில் மொத்தம், 4,228 பேருக்கு இந்நோய்க் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, நோர் ஹிஷாம் தெரிவித்தார். கொவிட்-19 நோய் காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும்,72 பேரில், 43 பேருக்குச் சுவாச உதவித் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். 

புத்ராஜெயாவில், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான சிறப்புச் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இத்தகவல்களைத் தெரிவித்தார். 

-- பெர்னாமா