ஜெனிவா, 04 ஏப்ரல் [பெர்னாமா] -- பொது இடங்களில் முகக் கவசங்களை அணிவதன் மூலம், கொவிட்-19 நோய்க் கிருமித் தொற்றுவதைத் தடுக்க முடியாது.
ஆனால், அந்நோய்க் கிருமித் தொற்றியிருப்பவரிடமிருந்து மற்றொருவருக்கு அது பரவுவதை நிறுத்த முடியும் என்று, உலகச் சுகாதார நிறுவனமான டபிள்யூஎச்ஓ கூறுகிறது.
கொவிட்-19 நோய்க் கிருமிப் பரவுவதைத் தணிப்பதற்கு மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்த வழி.
ஆனால், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது என்பது எப்போதும் சாத்தியமற்றதாக இருக்கிறது என்று, உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரத் திட்டப் பிரிவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக் ராயன் தெரிவித்தார்.
மருத்துவத் தரம் வாய்ந்த முகக் கவசங்கள், முன்னிலை ஊழியர்களுக்கு அவசியம் வழங்கப்பட வேண்டிய அவசியத்தையும் டாக்டர் மைக் வலியுறுத்தினார்.
பெரும்பாலான மக்களுக்கு, கொவிட்-19 நோய்க் கிருமி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற இலேசான அல்லது மிதமான அறிகுறிகளை மட்டுமே காட்டும்.
அது, இரண்டு மூன்று வாரங்களில் சரியாகி விடலாம்.
ஆனால், வயதானவர்கள் மற்றும் சுகாதாரப் பிரச்னைகளைக் கொண்டிருப்போருக்கு, அந்நோய்க் கிருமி கடுமையான காய்ச்சலை ஏற்படுத்துவதுடன் மரணத்திற்கும் வழி வகுத்துவிடும் என்று, சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் மைக் தெரிவித்தார்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை